பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக கூடும் இடம்தான் வேடந்தாங்கல் ஏரி. சென்னையிலிருந்து 68 கிலோமீட்டர் தூரத்தில் காஞ்சிபுரம் மாட்டத்தில் அமைந்துள்ளது. ஒரே பருவத்தில் மட்டும் 30 வகையான 40 ஆயிரம் வரையிலான பறவைகள் இந்த ஏரிக்கு வருகை தருகின்றன. 29.51 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ஏரியும் அதனைச் சுற்றிய 5 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பும் 1998-ம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 23ஆம் தேதி தேசிய வனவுயிர் வாரியத்திடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கிலோமீட்டர் சுற்றளவிலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு குறைக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் 5,467 ஹெக்டேர் நிலப்பகுதியில் கட்டுமானம் உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை பாதுக்காக்கப்பட்ட பகுதியில் இருந்து விலக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்கள் சிறிய அளவிலான தொழில் செய்வதற்கும் வீடுகளுக்காகவும் கட்டுமானங்கள் எழுப்ப முடியும். நிலப்பயன்பாட்டையும் மாற்றிக்கொள்ள முடியும்.
பறவைகள் சரணாலய பரப்பளவை சுருக்குவதற்கான காரணங்களாக ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு அளித்த விண்ணப்பத்தில் தமிழக அரசு சொல்லியவை:
கட்டுமானங்களை கட்ட முடியாத காரணத்தால் உள்ளூர் மக்களை பறவைகள் சரணாலய பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் ஈடுபடுத்த முடியவில்லை. ஏரியைச் சுற்றி முதல் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள விநாயகநல்லூர், சித்தாதூர், பசும்பூர், வேடவாக்கம், வளையபுதூர், அண்டவாக்கம் ஆகிய இடங்களில் மட்டுமே தற்போது விவசாயம் நடப்பதாகவும் 3 முதல் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களில் விவசாயம் கைவிடப்பட்டதால் அங்கு பறவைகள் வருவதில்லை.
அப்பகுதியில் கட்டுமானங்கள் எழுப்பும்போதும், நிலப்பயன்பாட்டை மாற்றும்போதும் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்குமிடையே பிரச்னைகள் எழுகிறது. இதனைத் தடுக்கவே சரணாலய பரப்பை குறைப்பதாக தமிழ்நாடு வனத்துறை தெரிவித்திருந்தது. தமிழக அரசின் இந்த முடிவு தொடர்பாக கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது சரணாலயத்தின் எல்லையை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும் ஏரியைச் சுற்றியுள்ள முதல் 1 கிலோமீட்டர் சுற்றளவை core zone ஆகவும், அடுத்த 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை buffer zone ஆகவும், அடுத்த 2 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை eco sensitive zone ஆகவும் வகைப்பாடு செய்யப்போவதால் மொத்தமுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியையும் பாதுகாக்க முடியும் எனவும் சரணாலய பகுதியை தனியார் நிறுவனத்திற்கோ, தொழிற்சாலை அமைக்கவோ, வர்த்த்க நிறுவனம் அமைக்க அரசு உதவுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று
வனத்துறை தெரிவித்துள்ளது.
5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியை குறைக்கும் எண்ணமில்லை என்று கூறியிருந்தாலும் கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு மத்திய அரசிடம் சரணாலயத்தின் பரப்பளவை குறைப்பதற்கான அனுமதிகோரி சமர்ப்பித்த விண்ணப்பமானது தற்போது வரை திரும்பப்பெறவில்லை.
இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் நம்மிடம் பேசியதாவது, ‘தமிழ்நாடு வனத்துறை செய்த பெரும் மோசடி இது. சன் பார்மா என்கிற மருந்து உற்பத்தி நிறுவனம் தனது உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக மே 30ஆம் தேதி தேசிய வனவுயிர் வாரியத்திடம் அளித்த விண்ணப்பத்தில் தனது விரிவாக்கமானது சரணாலயத்தின் எல்லையிலிருந்து 0.72 கிலோமீட்டர் தொலைவிலும், ஏரியின் எல்லையிலிருந்து 3.72 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த கணக்கீட்டையே சன் பார்மா நிறுவனம் இன்னும் அனுமதிக்கப்படாத தமிழக அரசின் கோரிக்கையான 2 கி.மீ சுற்றளவை குறைத்து மீதியிருக்கும் இடத்தின் எல்லையிலிருந்து மேற்கொண்டுள்ளது. இதன் மூலமாக சன் பார்மா நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காகவே தமிழக அரசு சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க முயன்றுள்ளது தெளிவாகிறது" என்று கூறினார்.
இந்த ஒட்டுமொத்த விவகாரம் தொடர்பாகவும் பிரேர்னா சிங் பிந்த்ரா, காஞ்சி கோலி, தியோடர் பாஸ்கரன், ரொமுலஸ் விட்டேகர் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான 21 சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தேசிய வனவுயிர் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் சரணாலத்தின் பரப்பளவை குறைக்கும் தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் எனவும் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அதிக மாசை ஏற்படுத்தும் சிகப்பு வகை ஆலைகள் செயல்பட அனுமதித்தது தொடர்பாகவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see: